கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் வருகை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் வருகை
Published on

550 கன அடி வருகை

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் 2 தவணைகளாக 12 டி.எம்.சி. நீரை ஆந்திர மாநில அரசு, கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும் என்பது கிருஷ்ணா நதி திட்டத்தின் கீழ் போடப்பட்ட ஒப்பந்தமாகும். அதன்படி நடப்பாண்டுக்கான 2-ம் தவணை நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு 550 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

குடிநீர் வழங்கும் ஏரிகளில், 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,064 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 132 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3 ஆயிரத்து 80 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 442 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 50 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 132 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

8 டி.எம்.சி. சேமிப்பு

பூண்டி ஏரியில் 32.93 சதவீதமும், சோழவரம் ஏரியில் 12.21 சதவீதமும், புழல் ஏரியில் 93.33 சதவீதமும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 88.40 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 83.68 சதவீதமும், வீராணம் ஏரியில் 9 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 59.75 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.). தற்போது 7 ஆயிரத்து 900 மில்லியன் கன அடி (சராசரியாக 8 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மட்டும் சராசரியாக 88 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 831 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 5 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 213 கன அடியும், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் இருந்து 15 கன அடியும் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 175 கன அடி வீதம் திறக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து வெறும் 7 டி.எம்.சி. நீர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகருக்கு மாதம் 1 டி.எம்.சி. குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது இருக்கும் நீர் மூலம் அடுத்த 8 மாதத்துக்கு நிலைமையை சமாளிக்க முடியும். அதன்பிறகு வடகிழக்கு பருவ மழை மூலம் கூடுதலாக நீரை சேமிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com