சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக வார் மெமோரியல் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மழைக்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த இடங்களில், ஏழை எளிய மக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சென்னை மாநகராட்சியில் 9,969 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 5.64 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். மழைக்குப் பிறகு எந்தவொரு தொற்றுநோயும் ஏற்படவில்லை

நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். காய்ச்சிய குடிநீர் மற்றும் சுத்தமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். சாலைகளில் ஏற்பட்ட 4,162 பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை 1.38 லட்சம் மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. பேருந்து செல்லும் 40% சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com