மரத்தில் வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 6 பேர் படுகாயம்

குமுளி மலைப்பாதையில் மரத்தில் வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மரத்தில் வேன் மோதி அய்யப்ப பக்தர்கள் 6 பேர் படுகாயம்
Published on

மதுரையில் இருந்து ஒரு வேனில் 18 அய்யப்ப பக்தர்கள் கேரள மாநிலம் சபரிமலைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனை மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 41) என்பவர் ஓட்டினார். அந்த வேன் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேன் மோதியது. இதில் வேனின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்தில் வேனில் பயணம் செய்த மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் (40), ஜெயராமன் (35), டிரைவர் ராமகிருஷ்ணன் உள்பட 6 அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த அய்யப்ப பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com