ரூ.6½ கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணி

ரூ.6½ கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணிகளை அமைச்சர் தா.மோ அன்பரசன் தொடங்கி வைத்தார்.
ரூ.6½ கோடியில் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணி
Published on

ஏரி புனரமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அடையாறு துணை வடிநில படுக்கையில் உள்ள கூடுவாஞ்சேரி ஏரியில் கொள்ளளவை உயர்த்தி ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்யும் பணியின் தொடக்க விழா நேற்று கூடுவாஞ்சேரி ஏரிக்கரையில் நடைபெற்றது.

இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், நகர மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ஏரியை புனரமைப்பு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ். ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், பொதுபணித்துறை உதவி பொறியாளர் குஜராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாலிக்கு தங்கம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ. பாபு ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 25 பயணாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்தானம், துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய அவை தலைவர் வி.ஜி.திருமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com