

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி சன்னதிதெருவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வநாதர் திருக்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆங்கில மாதமும் முதல் திங்கட்கிழமை அன்று அழகிய திருச்சிற்றம்பலம் உடையுறை திருமுறை வழிபாட்டு குழு சார்பில் காலையில் இருந்து மாலை வரை 6 மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதேபோல ஆங்கில மாதமான ஜனவரி மாதம் முதல் திங்கட்கிழமையான நேற்று அழகிய திருச்சிற்றம்பலம் உடையுறை திருமுறை வழிபாட்டு குழு சார்பில் 6 மணிநேர திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 6 மணி நேரம் இடைவிடாமல் இந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
இந்த வழிபாட்டு குழுவின் தலைவி சிவானி தலைமையில் 20 பெண் சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகம் படித்தனர். இவர்கள் திருவாசகம் படிக்கும்போது இடையிடையே அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சிவனடியார்களின் திருவுருவ படங்களுக்கு தீபம் காட்டி பூஜை செய்து வழிபட்டனர். இவர்கள் திருவாசகம் படிப்பதை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் கேட்டு மெய்சிலிர்த்து போனார்கள்.