

தூத்துக்குடி,
ரெயிலில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட 6.5 சவரன் தங்க நகைகளை தூத்துக்குடி இருப்புப்பாதை போலீசார் கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த குருசாமி மனைவி மாரிஸ்வரி. இவர் தற்போது சென்னை முடிச்சூர், மேற்கு லட்சுமி நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தபோது தாம்பரம் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரெயிலில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பயணித்துள்ளார். அப்போது அவர் அவசரத்தில் மற்றொரு பயணி வைத்திருந்த அதே போன்ற கருப்பு நிற டிராவல் பையைத் தவறாக மாற்றி எடுத்துக்கொண்டு கோவில்பட்டியில் இறங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் அது தனது பை இல்லை என்பது தெரியவந்தது. உடனடியாக ஆனந்தகுமார் அந்தப் பையைக் கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடை அலுவலகத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.
அந்தப் பை தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த பையின் உள்ளே 2 நெக்லஸ், 1 ஜோடி ஜிமிக்கி கம்மல், 1 ஜோடி காது மாட்டால் ஆகியவை இருந்தன. மேலும் அதில் ஒரு பிரபல நகைக் கடையின் ரசீதும் இருந்தது.
அதைத் தொடர்ந்து, இருப்புப்பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு, நகையின் உரிமையாளர், சென்னை முடிச்சூரைச் சேர்ந்த மாரிஸ்வரி என்பதைக் கண்டறிந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரின் தகவலின் பேரில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் வந்த மாரிஸ்வரி, உரிய அத்தாட்சிகளைக் காண்பித்தார். பின்னர் 6.5 சவரன் எடை கொண்ட தங்க நகைகள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன. உரிய நேரத்தில் நகைகளைக் கண்டறிந்து ஒப்படைத்த தூத்துக்குடி இருப்புப்பாதை போலீசாருக்கு பயணியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.