தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

சென்னை,

உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுவரை இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தான் உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. பின்பு கொரோனா பாதிப்பு பெரிய அளவில் காணப்படவில்லை. அதேபோல் உயிரிழப்புகளும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. நாடு முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 95 பேர், தமிழ்நாட்டில் 66 பேர், மராட்டியத்தில் 56 பேர், கர்நாடகாவில் 13 பேர், புதுச்சேரியில் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது; ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என்று கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com