

சென்னை,
வருமானவரித் துறையில் 2021-2022-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி நிலவரப்படி வருமானவரித் துறையின் புதிய மின்னணு இணையதள முகவரியில் நிறுவனங்கள் மற்றும் பிற வரி செலுத்துவோர் 2021-2022-ம் ஆண்டுக்கு 6.63 கோடிக்கும் அதிகமான வருமானவரி கணக்குகளும், 99.27 லட்சம் சட்டப்பூர்வ படிவங்களும் தாக்கல் செய்து உள்ளனர்.
கடந்த 5 நாட்களில் 13.84 லட்சம் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த கணக்குகளில் 43 சதவீதத்துக்கும் அதிகமானவை ஆன்லைன் வருமானவரி கணக்கு படிவத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளும் இணையதள முகவரியில் இருப்பு பதிவேற்றப்பட்டு உள்ளன. தாக்கல் செய்யப்பட்ட 6.63 கோடி வருமானவரி கணக்குகளில் 6.01 கணக்குகள் சரிபார்க்கப்பட்டு உள்ளன.
2021-2022-ம் ஆண்டுக்கான 5.17 கோடிக்கும் அதிகமான கணக்கு படிவங்கள் செயலாக்கப்பட்டு ரூ.1.83 கோடி பணத்தை திரும்பப் பெறுகின்றனர். வரி செலுத்துபவர்களின் சந்தேகங்களை தீர்க்க அமைக்கப்பட்ட அமைப்பு மூலம் உரிய பதில் அளிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு வரி செலுத்துவோரின் குறைகளைத் தீர்க்க 2 மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டன. கணக்குகள் பதிவேற்றம், தணிக்கை அறிக்கை தொடர்பாக 16 ஆயிரத்து 252 மின்னஞ்சல்கள் பெறப்பட்டு பதில் அளிக்கப்பட்டது.
வருமானவரி கமிஷனர் சுரபி அலுவாலியா இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.