பெண்களிடம் தகராறு செய்த வாலிபர்களை தாக்கிய 7 பேர் கைது - பொதுமக்கள் சாலைமறியல்

கஞ்சா போதையில் பெண்களிடம் தகராறு செய்த வாலிபர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பெண்களிடம் தகராறு செய்த வாலிபர்களை தாக்கிய 7 பேர் கைது - பொதுமக்கள் சாலைமறியல்
Published on

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த விஷால், சுந்தர் ஆகியோர் கஞ்சா போதையில் அவலூர் கிராமத்திற்கு சென்று அங்கு வீதியில் சென்ற பெண்களிடம் வம்பு செய்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அவர்களை தாக்கி மாகரல் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். தாக்கியதில் காயமடைந்த விஷால், சுந்தர் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் வாலிபர்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி இரு பிரிவு சமுதாய மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் போலீசா வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பெண்களிடம் ரகளை செய்த வாலிபர்களை தாக்கியதாக 7 பேரை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி அவலூர் கிராம மக்கள் காஞ்சீபுரம்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வாலாஜாபாத் தாசில்தார் சுபப்பிரியா சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். திடீ சாலைமறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com