

புதுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம், பூதலூர் கிளையில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டம் முதுக்குளம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், குமரேசன், பாஸ்கர், நடராஜன், தேவிகா, மகாலட்சுமி ஆகியோர் நிலத்தின் ஆவணங்களை அடமானம் வைத்து ரூ.79 லட்சத்து 90 ஆயிரத்து 992 கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் கடனுக்குரிய மாத தவணை தொகையை செலுத்தவில்லை.
அதைத்தொடர்ந்து அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவை அனைத்தும் போலி ஆவணங்கள் என்று தெரியவந்தது.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலி ஆவணம் கொடுத்து கடன் வாங்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவரும், பூதலூர் தனியார் வங்கி கிளையில் பணம் ஒப்புதல் அளிக்கும் கிளை மேலாளருமான தேசிங்கு ராஜன் (வயது 40) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைதானார்.