விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு

பொள்ளாச்சியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை திருடி கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடி கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

பொள்ளாச்சி பாலக்காடு ரோடு எம்.ஜி.எம். நகரை சேர்ந்தவர் கருப்புசாமி(வயது 65). விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி(60). இந்த நிலையில் கருப்புசாமி வீட்டை பூட்டி விட்டு, தனது மனைவியுடன் வண்ணாமடை அருகே உள்ள மலையாண்டிகவுண்டனூரில் உள்ள தோட்டத்திற்கு சென்றார்.இதற்கிடையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் கருப்புசாமிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். உடனே அவர், பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் தோட்டத்தில் இருந்து கருப்புசாமி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இது தவிர பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

போலீசார் விசாரணை

மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து கடந்த 2 மாதமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com