ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

ஆந்திராவுக்கு 7½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது
Published on

அம்பத்தூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சென்னை வியாசர்பாடி கருமாதி மண்டபம் அருகே மினிவேனில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 44) மற்றும் நைனா முகமது (50) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் பெரம்பூர் பி.பி. சாலையில் மினி லாரியில் ஆந்திராவுக்கு கடத்திச்செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன், இது தாடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த முகமது ஷெரீப் (56) என்பவரை கைது செய்தனர்.

வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மலிவான விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிய வந்தது. இந்த 2 வழக்கிலும் தொடர்புடைய அலிபாய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com