

திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன் (வயது 42). தொழிலாளி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சிவசந்திரனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனை சட்டம் 506-ன் (கொலை மிரட்டல்) கீழ் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.