

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஐயப்பன்காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீஅரவிந்த்ராம் வீட்டில், முகமூடி அணிந்த நபர்கள் நுழைந்து 75 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிவகாசி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான தனிப்படையினர் மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில், முகமூடி கொள்ளையர்களுக்கு பின்னணியில் இருந்து உதவியாக செயல்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 21), சோமசுந்தரம்(24), ப்ரித்விராஜன்(28), மனோஜ்குமார்(24) ஆகிய 4 பேரை சிவகாசி போலீசார் அதிரடியாக கைது செய்து அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 4 பேரிடமும் சிவகாசியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட முக்கிய வழக்கில், தொடர்புடைய நபர்களை சிவகாசி டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான தனிப்படையினர் 5 நாட்களுக்குள் விரைந்து கைது செய்ததற்கு உயர் போலீஸ் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.