8 வயது சிறுவன் குத்திக்கொலை - தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்

சிறுவர்கள் விளையாட்டில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 வயது சிறுவன் குத்திக்கொலை - தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்
Published on

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார், மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகளும், அஸ்வின்குமார் (வயது 8) என்ற மகனும் உள்ளனர். அஸ்வின்குமார் அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். முத்துக்குமாரின் வீடு வேம்பார் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையம் முன் உள்ளது.

இந்த நிலையில், நேற்று காலையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையம் முன் சிறுவன் அஸ்வின்குமார் தலைக்குப்புற வெகு நேரமாக கிடந்தான். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவனை தூக்கி பார்த்தனர். அப்போது, கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் அவன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்த அஸ்வின்குமார் குடும்பத்தினரும் அங்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து உடனடியாக சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அஸ்வின்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வந்து அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.

அஸ்வின்குமார் கழுத்தில் கத்திக்குத்து காயம் இருந்ததால் அவனை யாராவது கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் சிறுவர்கள் விளையாட்டில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு யாரேனும் முன்விரோதத்தில் கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அஸ்வின்குமார் எப்படி இறந்தான்? என்பது குறித்து தெரியவரும். அதுவரை சந்தேகமரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக சூரங்குடி போலீசார் தெரிவித்தனர்.

பட்டப்பகலில் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் சிறுவன் போலீஸ் நிலையம் முன் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com