800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் தாலுகா போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து கேரளா நோக்கி சென்ற வேனை போலீசார் மறித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் வேனில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அந்த மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் தவுபீக், ராஜா முகமது ஆகியோர் என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வேன் மற்றும் பிடிபட்ட 2 பேரையும் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை பதுக்கி வைத்து உள்ளனர். பின்னர் அந்த அரிசிகளை மூட்டை கட்டி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com