புனேவிலிருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்திய 800 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது

புனேவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக வடக்கு மண்டல ஐஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புனேவில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக வடக்கு மண்டல ஐஜிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார், மும்பையிலிருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரெயில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையத்தில் நின்ற போது சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் 3 பேரை மடக்கிப் பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 22), ஜீவா(18), சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அரிநாத்(18) ஆகிய 3 பேர் புனேவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் போதை மாத்திரைகள் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து போதை மாத்திரைகள் கடத்திய வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






