சென்னையில் ஹால்மார்க் இல்லாத 803 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சட்டம், 2016-ன் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
சென்னையில் ஹால்மார்க் இல்லாத 803 கிராம் தங்க நகைகள் பறிமுதல்
இந்திய தர நிர்ணய அமைவனம்
Published on

சென்னை,

சென்னையில் தங்க நகைக் கடையில் ஹால்மார்க் விதிமுறை மீறல்: இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய அமலாக்க தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் மொத்தம் 803.99 கிராம் ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்.இது தொடர்பாக, மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

இந்திய தர நிர்ணய ஆணையத்தின், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள், நேற்று, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சட்டம், 2016-ன் பிரிவு 28-ன் கீழ், சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள ஒரு தங்க நகை கடையில் அமலாக்க தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

விதிமுறை மீறல்

இந்த நடவடிக்கையின்போது, கட்டாய ஹால்மார்க் (பிஐஎஸ் தரநிலை முத்திரை) இல்லாத தங்க நகைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இது பிஐஎஸ் சட்டம், 2016-ன் விதிமுறைகளை மீறுவதாக இருந்ததால், அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகைகள் பறிமுதல்

சோதனை நடவடிக்கையின்போது, ஹால்மார்க் முத்திரை இல்லாத பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் அளவுகளில் தாலிகள் 175 எண்ணிக்கை (மொத்த எடை: 671.50 கிராம்), குழந்தைகள் வளையல்கள் 12 எண்ணிக்கை (மொத்த எடை: 25.02 கிராம்), காதணிகள் 40 எண்ணிக்கை (மொத்த எடை: 86.14 கிராம்) மற்றும் பதக்கங்கள் 10 எண்ணிக்கை (மொத்த எடை: 21.33 கிராம்) ஆகியவை விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

நகைகள் பறிமுதல்
அதிகாரிகள்

803.99 கிராம் தங்க நகைகள்

இதன் மூலம், மொத்தம் 803.99 கிராம் எடையுள்ள ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சட்டம், 2016-ன் விதிமுறைகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் விசாரணை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்டன. இந்த அமலாக்க நடவடிக்கை, பிஐஎஸ் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் மற்றும் உதவி பணியாளர்களால், காவல் துறையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் எஸ் டி தயானந்த் தெரிவித்ததாவது:-

சந்தை கண்காணிப்பு

நுகர்வோர் நலனை பாதுகாக்கவும், கட்டாய பிஐஎஸ் சான்றிதழ் மற்றும் ஹால்மார்க் வழங்கப்பட வேண்டிய தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் இந்திய தரநிலைகளுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்யவும் பிஐஎஸ் தொடர்ந்து சந்தை கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிஐஎஸ் சான்றிதழ்

பிஐஎஸ் தரநிலை முத்திரை மற்றும் ஹால்மார்க் ஆகியவற்றின் தவறான பயன்பாட்டை தடுக்கவும், தரமற்ற பொருட்கள் சந்தையில் புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்தவும், பிஐஎஸ் சான்றிதழ் மற்றும் ஹால்மார்க் அமைப்பின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தவும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சட்டம், 2016-ன் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com