

சென்னை,
80-வது சுதந்திர தின நாளில், கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார்.
ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியா, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் பெற்றது. நாட்டு மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கிய நாளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் குடியரசு தினத்தைப்போல, சுதந்திர தினத்திலும் மாநில கவர்னர்களே தேசிய கொடியை ஏற்றும் வழக்கம் இருந்தது. 1974-ம் ஆண்டு முதல் குடியரசு தினத்தில் மாநில கவர்னர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்-அமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான். அவர்தான் 1974-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அன்று முதல், ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிகளும் சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி வருகிறார்கள்.
அந்த வகையில், நாட்டின் 80-வது சுதந்திர தினம் வரும் 15-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி, சென்னை தலைமைச்செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார்.
முன்னதாக, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். இந்த விழாவில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்க இருக்கிறார்.
அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
இதற்கு முன்பு சென்னை கோட்டை கொத்தளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர். அந்த வகையில், 7-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் தேசிய கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார்.
ஏற்கனவே, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகையும் மெரினா கடற்கரையில் தனியாக நடைபெற்று வருகிறது.