

சென்னை,
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கடந்த ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பான உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-
நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத பள்ளிக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். தனியார் பள்ளிகள், தங்களது கல்விக் கட்டணத்தை நடப்பு ஆண்டில் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும். மாணவர்கள் முதல் தவணையை தற்போது செலுத்த வேண்டும். கடைசி தவணையை 2022 பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவீத கட்டணத்தைச் செலுத்தலாம். வருமானம் இல்லாதவர்கள், கல்விக் கட்டணத்தில் சலுகைக் கேட்டு பள்ளிகளை நாடலாம்.
தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் கல்விக் கற்க தனியார் பள்ளிகள் வாய்ப்பளிக்க வேண்டும். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக் கூடாது.
இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.