

சென்னை,
நாசிக்கில் இருந்து சென்னைக்கு 'காந்தா எக்ஸ்பிரஸ்' சரக்கு ரெயில் மூலம் 850 டன் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35-க்கு வழங் கப்பட உள்ளது.
பருவமழை குறைவால் விளைச்சல் பாதிக்கப்பட்டு டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கையிருப்பு வெங்காயத்தை சந்தைகளுக்கு வினியோகிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், 'காந்தா எக்ஸ்பிரஸ்' சரக்கு ரெயில்கள் மூலம் முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு 500 டன் வெங்காயம் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு 848.50 டன் வெங்காயம் வந்துள்ளது. கடந்த 29-ந்தேதி மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மாட் பகுதியில் இருந்து இந்த வெங்காயம் சரக்கு ரெயிலில் ஏற்றி அனுப்பப்பட்டது. அந்த ரெயில் நேற்று காலை தண்டையார்பேட்டை பணிமனைக்கு வந்து சேர்ந்தது.
இதனைத்தொடர்ந்து, சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை பிரித்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மாலை 5 மணிக்கு தொடங்கியது. சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் மலைபோல் குவித்து வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு லாரியில் 25 டன் வீதம் ஏற்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இவை ஓரிரு நாட்களுக்குள் கூட்டுறவு அங்காடிகள், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தமிழக அரசால் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தேசிய கூட்டுறவு சந்தையியல் சம்மேளனத்தின் மாநில தலைமை அதிகாரி பிரகாஷ் ராவ் கூறியதாவது:- தற்போது ரெயிலில் கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை தமிழக அரசு, லாரிகள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அங்காடி மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும். மாநில அரசு 1 கிலோ வெங்காயத்தை ரூ.35 என்ற அடிப்படையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.