

தூத்துக்குடி,
லட்சத்தீவு நோக்கி மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் கவராத்தி கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார்(எ) மிக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்திலிருந்து 9 மீனவர்கள் லட்சத்தீவுகள் நோக்கி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கவராத்தி தீவுப் பகுதியில் விசைப்படகு சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறி கவராத்தி கடற்படையினர் அந்த விசைப்படகைக் கைப்பற்றிச் சிறைபிடித்தனர்.
படகு உரிமையாளர் நட்டார் என்ற மிக்கேல்ராஜ் உள்பட படகிலிருந்த 9 மீனவர்களும் கவராத்தி தீவில் கடற்படையினரின் விசாரணைக்காக விசைப்படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தருவைகுளம் பகுதி கடலோர மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.