

சென்னையை அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 23). கஞ்சா வியாபாரி. இவரை கடந்த 23-ந் தேதி இரவு ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.
இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சாலமங்கலம் பகுதியை சேர்ந்த பூபதி என்பவர் முன் விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து முரளியை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக பூபதி உள்பட 9 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆலந்தூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு வைஷ்ணவி முன்னிலையில் சாலமங்கலத்தைச் சேர்ந்த பூபதி (20), சொரப்பனஞ்சேரியை சேர்ந்த வாசு (22), அனகாபுத்தூரைச் சேர்ந்த ஜெகதீசன் (19), குண்டு பெருமேடு பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா(20), படப்பையை சேர்ந்த தினேஷ் (24), சாலமன் தேவகுமார் (22), நித்திஷ் (19), விக்னேஷ் குமார் (21), அய்யப்பன் (19) ஆகிய 9 பேர் சரண் அடைந்தனர். இவர்கள் 9 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து 9 பேரையும் பரங்கிமலை போலீசார் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.