

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி எலச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் புட்டம். இவரது மனைவி ராஜு. இந்த தம்பதிக்கு கல்யாணி (15 வயது) என்ற மகள் இருந்தார். இவர் தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் நடந்த அரசு பொதுத்தேர்வை எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் கல்யாணி தனது தாயிடம் தாமரைக்கரையில் தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். அதற்கு ராஜு, பெண்கள் தனியாக எங்கும் வெளியே செல்லக்கூடாது. வீட்டிலேயே இரு என்று கூறிவிட்டு கால்நடைகள் மேய்க்க சென்றுவிட்டார். இதனால் வீட்டில் கல்யாணி தனியாக இருந்தார்.
இந்த நிலையில் மனமுடைந்த கல்யாணி வீட்டில் கத்தரிக்காய் செடிக்கு அடிக்கக்கூடிய பவுடரை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். மதியம் 2 மணி அளவில் வீட்டுக்கு வந்த ராஜு, மகள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கல்யாணியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் கல்யாணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.