2 வயது குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது

சமூக வலைதளங்கள் மூலம் 96 நாள்களில் ரூ.16 கோடி திரட்டப்பட்டதையடுத்து, சோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து வாங்கப்பட்டது.
2 வயது குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது
Published on

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகே உள்ள சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது32). ரெப்கோ வங்கி உதவி மேலாளர். இவரது மனைவி எழிலரசியும் (32) அதே வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார்.

இவர்களுடைய 2 வயது மகள் பாரதிக்கு முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோய் இருப்பது கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி கண்டறியப்பட்டது. இதனால், பாரதியால் தானாக எழுந்து நடக்க முடியவில்லை. இந்த சிறுமியை பரிசோதித்த பெங்களூரு டாக்டர்கள் ரூ.16 கோடி மதிப்பிலான, சோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும் என கூறினர்.

இதையடுத்து ஜெகதீஷ்-எழிலரசி தம்பதியினர் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்ட தொடங்கினர். இதையடுத்து பல்வேறு தன்னார்வலர்களும் பல்வேறு இயக்கங்களை நடத்தி நிதி திரட்டி வழங்கினர். மாவட்ட நிர்வாகமும் தனியாக வங்கி கணக்கை தொடங்கி, ரூ.45 லட்சத்தை திரட்டி அளித்தது.

கடந்த நவம்பர் 16-ந் தேதியுடன் 96 நாள்களில் ரூ.16 கோடி திரட்டப்பட்டதையடுத்து, சோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து வாங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாரதிக்கு பெங்களூருவில் டாக்டர் ஆன் ஆக்னஸ் மேத்யூ தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் ஊசியை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com