வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள்.
தி.மு.க. சார்பில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் 64 ஆயிரம் முகவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு முகவர், நாளொன்றுக்கு 50 வாக்காளர் சேர்ப்பு படிவங்களை மட்டுமே வழங்கலாம் என்ற கட்டுப்பாட்டை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 92,626 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும் (படிவம் 6), 1,007 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் (படிவம் 7) அளிக்கப்பட்டுள்ளன. இறந்த வாக்காளர் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவு இருக்கும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் குறைவான 6-ம் எண் படிவங்கள்தான் வந்துள்ளன.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாம் வருகிற 27,28-ம் தேதி (சனி, ஞாயிறு) மற்றும் ஜனவரி 3,4 (சனி, ஞாயிறு)ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.







