பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி

பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலியானார்.
பூந்தமல்லி அருகே மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலி
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் சக்தி சரவணன் (வயது 9). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சக்தி சரவணன் கடந்த 8-ந் தேதி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

சிறுவன் பலி

இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காய்ச்சல், தொண்டை வலி, டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என டாக்டர்கள் முகாம்கள் அமைத்து தீவிர மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முழுமையான சுகாதார வசதிகள் ஏதும் செய்து தரப்படாமல் ஆங்காங்கே குப்பை, சாக்கடைகள் இருந்ததால் கொசுக்கள் உற்பத்தியாகி சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com