

அரகண்டநல்லூர்:
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கஜிதாபீவி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அருள்குமார் வரவேற்றார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உளள குறைகள் குறித்தும், அதனை நிவர்த்தி செய்வது குறித்தும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்தும் பேசினர். அதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி ஆதாரத்தை கணக்கில் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் செய்து முடிக்கப்படும் என்றார். கூட்டத்தில், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பயனில்லாமல் இருக்கும் ரெயில்வே நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு தர வேண்டும், இந்த இடங்களில் பேரூராட்சி சார்பில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு பேரூராட்சியின் வருமானத்திற்கும், மக்களுக்கு பயன்பெறும் வகையில் இதர வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வேம்பு, சுந்தரமூர்த்தி, அனுராதா, சரவணன், மாணிக்கவாசகம், ஜெரினாபேகம், ரமேஷ், குமார், அனிதா, சுகி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை எழுத்தர் சுதாகர் நன்றி கூறினார்.