குழியில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் பலி

குழியில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
குழியில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன் பலி
Published on

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ரோகித்சர்மா(வயது 3). இவன் நேற்று தனது பாட்டி தங்கம்மாளுடன், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளான். பின்னர் அவன் அப்பகுதியில் விளையாட சென்றான். இதற்கிடையே அந்த ரேஷன் கடை அருகில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டிருந்தது. மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையால், அந்த குழி முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில் விளையாட சென்ற ரோகித்சர்மா அந்த குழியில் தவறி விழுந்தான். இதில் நீரில் மூழ்கி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதற்கிடையே தனது பேரனை காணவில்லையே என தங்கம்மாள், அப்பகுதியில் தேடியுள்ளார்.

அப்போது ரோகித்சர்மா குழியில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் ரோகித் சர்மாவின் உடலை கண்டு கதறி அழுதது, அங்கு இருந்தவர்களையும் கண்கலங்க செய்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரோகித் சர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டியவர்கள், அதனை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்காது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com