அரியலூர்- செந்துறை சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு

அரியலூர்- செந்துறை சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
அரியலூர்- செந்துறை சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு
Published on

பாதாள சாக்கடையில் உடைப்பு

அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பல வீடுகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் இணைக்கப்பட்ட கழிவுநீர் அகற்றப்பட்டு வருகிறது. தினசரி ஏதாவது ஒரு பகுதியில் பாதாள சாக்கடையில் உடைப்போ அல்லது குப்பைகள் அடைத்துக்கொண்டோ கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இந்தநிலையில் நேற்று அரியலூர்- செந்துறை சாலையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.

கடும் துர்நாற்றம்

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அடைப்பை சரி செய்தனர். ஆனால் குறுக்கு சாலைகளில் (அழகப்பா நகர் முதல் தெரு முதல் 3-வது தெரு வரை) ஏற்பட்டுள்ள அடைப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி பல வீடுகளின் வாசலில் தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் நகராட்சி ஊழியர்கள் அதனை சுத்தம் செய்யாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com