செம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

செம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
செம்பரம்பாக்கம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

பூந்தமல்லியை அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீத் சிங் (வயது 30). இவர், செம்பரம்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் பூந்தமல்லி நோக்கி கம்பெனிக்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நவநீத் சிங், சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

அந்த நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் கொட்டும் மழையிலும் தீ அணையாமல் கொழுந்து விட்டு எரிந்தது. நவநீத் சிங், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும் கார் தீயில் எரிந்து நாசமானது. கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com