மத போதகர் ஓட்டி வந்த கார் மோதி 12 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

பாவூர்சத்திரத்தில் மத போதகர் ஓட்டி வந்த கார் மோதி 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
மத போதகர் ஓட்டி வந்த கார் மோதி 12 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
Published on

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் வசிப்பவர் வில்சன் சாமுவேல் (வயது 58). இவர் அங்குள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது காரில் தென்காசிக்கு சென்று விட்டு, மீண்டும் அடைக்கலப்பட்டணத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பாவூர்சத்திரம் நான்குவழிச் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகில் சென்றபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது தனியார் நிறுவனம் சார்பில், சாலையோரம் விற்பனைக்காக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய மேட்டார் சைக்கிள்களின் மீது கார் பயங்கரமாக மோதியது.

மோட்டார் சைக்கிள்கள் சேதம்

இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. மேலும் காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வில்சன் சாமுவேல் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள்களின் மீது கார் மோதிய காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com