நிச்சயதார்த்தம் முடித்த பெண்ணை ஏமாற்றி வேறொருவருடன் திருமணம்: 3 பேர் மீது வழக்கு

வாலிபர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கண்டரக்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் புஷ்பநாதன் (வயது 34). இவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இவர்களது திருமணம் வருகிற 5-ந்தேதி நடக்க இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அப்பெண்ணின் பெற்றோர், திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பலருக்கும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் புஷ்பநாதன், தனது தந்தை லட்சுமணன், தாய் விஜயலட்சுமி ஆகியோரின் உதவியுடன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அந்த புகைப்படங்களை நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தட்டிக்கேட்ட அப்பெண்ணை புஷ்பநாதன் தனது தாய்-தந்தையுடன் சேர்ந்து திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் புஷ்பநாதன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






