திருச்சி: வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி வாலிபர் உயிரிழப்பு...!

திருச்சி மணப்பாறை அருகே நடந்த வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி வாலிபர் உயிரிழப்பு...!
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெஸ்டோநகரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா மற்றும் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ஐந்தாவது ஆண்டாக இன்று வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் 10 வது காளையாக சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்த சுந்தரம் என்பவர் காளை களம் இறக்கப்பட்டது. இதனை அடக்குவதற்காக சொக்கலிங்கபுரம் ஸ்ரீதுவராள்பதி அம்மன் குழுவினரும் (9 பேர் அடங்கிய குழுவினர்) களமிறங்கினர். போட்டி முடிவடைய கடைசி இரண்டு நிமிடம் என்று அறிவிக்கப்பட்டவுடன் காளையை அடக்க முயன்ற சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, விழுப்பிணிகளத்தைச் சேர்ந்த பாண்டிக்குமார் (25) என்பவர் மாட்டை அடக்க முற்பட்டபோது எதிர்பாராவிதமாக மாடு கொம்பில் குத்தி தூக்கி வீசியது.

இதில் வயிற்றுப்பகுதியில் காயமடைந்த பாண்டி குமார் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களில் பாண்டிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வாலிபர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com