புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் விரக்தி... செல்போன் செயலி மூலம் கடன் வாங்கிய டிரைவர் தற்கொலை

செல்போன் செயலி மூலம் வாங்கிய கடனை கேட்டு மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஆவடி,

ஆவடி பாரதி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் சத்ய நாராயணன் (37 வயது). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சத்யநாராயணன், ஆவடி அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

அவர், செல்போன் செயலி மூலம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடனை செலுத்த தவறியதால் பல எண்களில் இருந்து அவரது செல்போனுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் வந்துள்ளது. மேலும் மர்ம நபர்கள் அடிக்கடி அவரது செல்போனில் பேசி தொந்தரவு செய்ததுடன், கடனை செலுத்தக்கோரி மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சத்ய நாராயணன் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்றும், அவரது தாயார் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் அனுப்பியுள்ளனர். இதுபற்றி அவர் ஏற்கனவே ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சத்யநாராயணனின் மனைவியின் புகைப்படத்தையும் மர்மநபர்கள் ஆபாசமாக சித்தரித்து அவருக்கு அனுப்பினர். இதனால் மனமுடைந்த சத்யநாராயணன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார்.

உடனடியாக அவரை மீட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்யநாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com