பிரபல நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல நகைக்கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சென்டிரல் தியேட்டர் அருகே உள்ள காந்தி நகரில் வசித்து வந்தவர் எம்.பி.சுரேஷ் (வயது 55), பிரபல நகைக்கடை அதிபர். இவர் கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் நகைக்கடை நடத்தி வந்ததோடு, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

மேலும் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்கத்தலைவராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சுரேஷ் வீட்டில் தனது அறையில் இருந்தார். வீட்டில் உள்ளவர்கள் மற்ற அறைகளில் இருந்தனர். அப்போது சுரேஷ் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரது அறைக்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகே அவரது துப்பாக்கியும் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மனோகரன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் எம்.பி.சுரேஷ் தான் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியால் கழுத்து பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

நகைக்கடை அதிபர் எம்.பி.சுரேஷ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது பண விவகாரத்தில் ஏதேனும் மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்தாரா? என கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com