உணவு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தவறுகளை மறைக்க அதிகாரிகளே செயற்கையான தீ விபத்தை ஏற்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
கோப்புப்படம்
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உணவு சேமிப்பு கிடங்கில் போதிய இடம் இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாம்பட்டி, ஐந்தாங்கட்டளை ஊராட்சிகளுக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கருகி வீணாகியதாக செய்திகள் வந்துள்ளன.

திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது புரியவில்லை. மேலும் பல நாட்களாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லை அரிசி மில்களுக்கு அரவைக்கு அனுப்பாமல் அதிகாரிகள் தேக்கி வைத்ததால் அவைகள் பாழ்பட்டு விட்டதாக ஒருசில விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தங்களுடைய தவறுகளை மறைக்க அதிகாரிகளே ஒரு செயற்கையான தீ விபத்தை ஏற்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலை தமிழகம் முழுவதும் ஏற்படாமல் இருக்க இந்த தீ விபத்து குறித்து முழு விசாரணை ஒன்றை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று த.வெ.க அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com