

சென்னை,
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (வயது 51). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் இவரது அண்ணி மற்றும் 3 பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னீர்செல்வன் தனக்கு சொந்தமான 22 பவுன் நகைகளை தனது அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்கும் படி கூறியுள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அண்ணி வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, பன்னீர்செல்வன் கொடுத்த 22 பவுன் நகைகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 107 பவுன் நகைகள் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் வீட்டின் கதவோ அல்லது பீரோவோ உடைக்கப்படவில்லை. எனவே வீட்டில் உள்ள நபர்களே இதனை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, பன்னீர்செல்வனின் அண்ணனின் 3-வது மகளான 18 வயது சிறுமியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிளஸ்-2 விடுமுறையின்போது, சிறுமி ஒரு இடத்தில் தற்காலிகமாக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்த செனாய் நகரை சேர்ந்த கார்த்திக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கார்த்திக், 'எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுகிறது' என கூறி சிறுமியிடம் நயமாக பேசியுள்ளார்.
காதலனின் வார்த்தைகளை நம்பிய சிறுமி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை சிறுக சிறுக திருடி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். கார்த்திக் அடுத்தடுத்து பணம், நகை என கேட்க, வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளையும் சிறுமி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.
ஏமாந்த சிறுமியிடம் இருந்து வாங்கிய நகைகளை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அடகு வைத்தும், விற்றும் பணமாக்கியுள்ளனர். அந்த பணத்தில் புதிதாக கார், இருசக்கர வாகனம், விலை உயர்ந்த செல்போன்கள் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான ஆவடியை சேர்ந்த குமரகோபால் (20) பிரகாஷ் (22), ரமேஷ் (47), சூர்யா (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 பவுன் நகைகள், ஒரு செல்போன், ரூ.50 ஆயிரம், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர். காதலனுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை அள்ளி கொடுத்த சிறுமியின் விபரீத செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.