விளையாட சென்ற சிறுமி.. கோவில் குளத்தில் பிணமாக மீட்பு.. என்ன காரணம்? - போலீசார் விசாரணை

காணாமல் போன சிறுமி, பெருமாள் கோவில் குளத்தில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.
விளையாட சென்ற சிறுமி.. கோவில் குளத்தில் பிணமாக மீட்பு.. என்ன காரணம்? - போலீசார் விசாரணை
Published on

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் தேவகீர்த்திகா (வயது 7). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வந்த தேவகீர்த்திகா விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றாள். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே சிறுமி மாயமான தகவல் அறிந்து உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடினர். அப்போது தேவிபட்டினம் பெருமாள் கோவில் குளத்தில் சிறுமி பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர், சிறுமியின் உடலை பார்த்து கதறினர்.

இச்சம்பவம் பற்றி அறிந்த தேவிபட்டினம் போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

கோவில் குளம் அருகே சிறுமி விளையாடியபோது குளத்தில் தவறி விழுந்து மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதுவதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் சிறுமியின் சாவுக்கு வேறு காரணம் உள்ளதா? எனவும் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com