ஸ்கூட்டரில் சென்ற அரசு பள்ளி பெண் ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து

ஸ்கூட்டரில் சென்ற அரசு பள்ளி பெண் ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர் தனது கையை கிழித்து கொண்டார்.
ஸ்கூட்டரில் சென்ற அரசு பள்ளி பெண் ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 35). அரசு பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

புவனேஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை புவனேஸ்வரி பணி காரணமாக முத்துப்பேட்டைக்கு வந்து விட்டு தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

சரமாரி கத்திக்குத்து

அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த மதிவாணன்(36) என்பவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். புவனேஸ்வரியின் ஸ்கூட்டர் மீது மதிவாணன் தனது மோட்டார் சைக்கிளை மோதி கீழே தள்ளினார்.

இதில் ஸ்கூட்டரில் இருந்து புவனேஸ்வரி கீழே விழுந்தார். அப்போது மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மதிவாணன் புவனேஸ்வரியின் கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். பின்னர் அவரும் தனது கையை கத்தியால் கிழித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

பொதுமக்கள் அதிர்ச்சி

உடனே ரத்தக்காயத்துடன் மதிவாணன் அங்கிருந்து ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த புவனேஸ்வரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் கத்தியால் கிழித்துக்கொண்டதில் காயம் அடைந்த மதிவாணனும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com