

ஆலந்தூர்,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில், குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்த ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில், குதிரை மீது அமர்ந்தபடி உணவு பார்சல்களை எடுத்துச் செல்லும் அந்த வினியோக ஊழியரின் காட்சிகள் பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
வழக்கமாக இருசக்கர வாகனங்களில் உணவு வினியோகம் செய்யப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குதிரையை பயன்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், “ஈ.சி.ஆர். ராஜா டெலிவரி பாய்”, “டிராபிக்கை தவிர்க்க சூப்பர் ஐடியா” என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வித்தியாசமான இந்த முயற்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.