

மதுரை,
தமிழ்நாட்டில் பெருவெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சரோ நேரில் வந்து பார்க்காதது ஏன்? என்றும் குஜராத்தில் புயல் வந்த போது மட்டும் நேரில் சென்று பார்வையிட்டு 1000 கோடி நிவாரண நிதி அறிவித்தது ஏன்? என்றும் சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ள பதிவில், 'தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை. குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர்.
தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன்? தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா?' என்று கூறியுள்ளார்.
முன்னதாக வெங்கடேசன், அமித்ஷா தலைமையிலான குழு கூடி குஜராத், அசாம், கர்நாடகா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்திற்கு ரூ 3060 கோடி புயல், வெள்ள நிவாரண நிதி அறிவித்த நிலையில் தமிழக அரசு கேட்ட ரூ 4625 கோடி எப்பொழுது வரும் என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.