காதலியுடன் தனிமையில் இருந்ததை தாய் பார்த்ததால் 50 அடி உயர மாடியில் இருந்து குதித்த சட்டக்கல்லூரி மாணவர் சாவு

காதலியுடன் தனிமையில் இருந்ததை அவரது தாய் பார்த்ததால் 50 அடி உயர மாடியில் இருந்து குதித்த சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலியுடன் தனிமையில் இருந்ததை தாய் பார்த்ததால் 50 அடி உயர மாடியில் இருந்து குதித்த சட்டக்கல்லூரி மாணவர் சாவு
Published on

சேலம்,

சட்டக்கல்லூரி மாணவர்

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி ரோடு கே.கே.நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 54). இவர், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சீனியர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (18). இவர், சேலத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், கல்லூரி அருகே சின்ன கொல்லப்பட்டியில் வீடு வாடகை எடுத்து தங்கியிருந்து, தினமும் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதே சட்டக்கல்லூரியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியும் படித்து வருகிறார். அந்த மாணவி, தனது தாய், தங்கையுடன் கல்லூரி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அந்த மாணவியும், மாணவர் சஞ்சயும் காதலித்து வந்துள்ளனர்.

காதலியுடன் சந்திப்பு

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சஞ்சய் தனது காதலியை பார்ப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். பின்னர் காதலர்கள் இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மாணவியின் தாய் திடீரென எழுந்து பார்த்தபோது, அறையில் தூங்கி கொண்டிருந்த மகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவரை தேடி வீட்டின் மொட்டை மாடிக்கு அவர் சென்றார். அப்போது மகள், சஞ்சய் உடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மாடியில் இருந்து குதித்து சாவு

இதை சற்றும் எதிர்பார்க்காத சஞ்சய் அங்கிருந்து செல்வதற்காக 50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சஞ்சயும், அந்த மாணவியும் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாக படித்ததும், அப்போது இருந்தே அவர்களுக்குள் காதல் இருந்து வந்ததும், அதனால் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது ஒருபுறம் இருக்க, காதலியிடம் சஞ்சய் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் பார்த்துவிட்டதால் பயந்து போய் கீழே குதித்தபோது படுகாயம் அடைந்து இறந்தாரா? அல்லது தவறி விழுந்துவிட்டாரா? என்பது குறித்தும், வீட்டின் மொட்டை மாடியில் நள்ளிரவில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் சஞ்சய்யின் காதலி மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com