ஈரோட்டில் ரூ.35,000-க்கு ஏலம் விடப்பட்ட எலுமிச்சை பழம்

சிவகிரி அருகே கோவில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் ரூ.35,000-க்கு ஏலம் போனது.
ஈரோட்டில் ரூ.35,000-க்கு ஏலம் விடப்பட்ட எலுமிச்சை பழம்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவை ஏலம் விடப்பட்டன. இவற்றை ஏராளமான பக்தர்கள் போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழத்தை கோவில் நிர்வாகத்தினர் ஏலம் விட்டனர். அந்த பழத்தை பக்தர் ஒருவர் ரூ.35,000-க்கு ஏலத்தில் எடுத்தார். அவருக்கு அந்த பழத்தை கோவில் நிர்வாகத்தினர் வழங்கினர். பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஏலத்தில் எடுப்பவருக்கு செல்வமும், ஆரோக்கியமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com