

சென்னை
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவியேற்ற நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 400 ரவுடிகள் மட்டுமே சிறையில் இருந்து வெளியில் உள்ளனர். இந்த ரவுடிகளை ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் வீதம் நெருக்கமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை தொடர் கண்காணிப்பில் வைப்பதற்கு காவலர்கள் 2 ஷிப்ட்டுகளாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
ரவுடிகளை கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளை தகவல்களாக திரட்டி, காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.