அந்தரத்தில் தொங்கிய லாரி.. மரணத்தின் விளிம்பில் இருந்த டிரைவர் - கொண்டை ஊசி வளைவில் திக் திக் காட்சி

இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தரத்தில் தொங்கிய லாரி.. மரணத்தின் விளிம்பில் இருந்த டிரைவர் - கொண்டை ஊசி வளைவில் திக் திக் காட்சி
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து தக்காளி பெட்டிகள் பாரம் ஏற்றிய லாரி கோவை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.

ஏழாவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சாலையில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை ஓரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com