ஒரே கயிற்றில் காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை...! திருமணமான 2 மாதத்தில் நடந்த சோகம்

திருமணமான 2 மாதத்தில் காதல் தம்பதி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஒரே கயிற்றில் காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை...! திருமணமான 2 மாதத்தில் நடந்த சோகம்
Published on

தூத்துக்குடி,

காதல் திருமணம்

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அனந்தமாடன்பச்சேரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்கமுனியசாமி (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

துவரங்கை பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (22). இவர் அனந்தமாடன்பச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார்.

அப்போது தங்கமுனியசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு அனந்தமாடன்பச்சேரியில் வசித்து வந்தனர்.

தகராறு

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் தங்கமுனியசாமியின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க முயன்றனர். ஆனால் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து உடனடியாக தருவைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது, அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய செய்தது. வீட்டில் கயிற்றின் ஒரு முனையில் தங்க முனியசாமியும், மற்றொரு முனையில் சீதாலட்சுமியும் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் உதவி கலெக்டர் கவுரவ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com