

பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் சாவடிப்பாரா புதுப்பதி வனப்பகுதியில் நேற்றி நள்ளிரவு 11.45 மணியளவில் 4 யானைகள் கொண்ட கூட்டம் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் யானைகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய தாய் யானை மற்றும் குட்டி யானை ஆகிய இரண்டும் ரெயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாளையார் வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதன் பின்னர், பழுதான என்ஜின் சரிசெய்யப்பட்டு, ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.
விபத்து நிகழ்ந்த இடம் தமிழக எல்லையிலிருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. வளைவான பாதையில் ரெயில் வந்தபோது யானைகள் தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகோ பைலட்டால் யானைகளை முன்கூட்டியே பார்த்து ரெயிலின் வேகத்தை குறைக்க முடியாமல் போனதே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ரெயில் வேகமாக இயக்கப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக யானைகள் தினத்தன்று தமிழக-கேரள எல்லைப் பகுதியில் ரெயில் மோதி தாய் யானை மற்றும் குட்டி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.