பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி அண்ணன்-தம்பி பலி

திருப்பத்தூர் அருகே பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி அண்ணன்-தம்பி சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தனர்.
பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி அண்ணன்-தம்பி பலி
Published on

திருப்பத்தூர் அருகே பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி அண்ணன்-தம்பி சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தனர்.

அண்ணன்-தம்பி

திருப்பத்தூர் அருகே மேற்கத்தியானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வினோத் (வயது 33), விக்னேஷ் (31) ஆகிய 2 மகன்கள். இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். விக்னேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் வினோத், விக்னேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிக்கன் வாங்கி வர தண்ணீர் பந்தல் பகுதிக்கு சென்றனர்.

சிக்கன் மற்றும் வீட்டுக்கான பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். புதூர்நாடு செல்லும் மட்றப்பள்ளி அருகில் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பாலத்தில் மோதியது

அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணன்-தம்பி இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தனர்.

அந்த சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் விபத்து நடந்தது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் மின்சாரம் வந்தவுடன் தான் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பொதுமக்கள் பார்த்து உடனடியாக உறவினர்களுக்கு தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணன்-தம்பி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com