கொத்தனாருடன் புதிதாய் மலர்ந்த காதல்.. மனைவியை வாழ்த்தி காதலனுடன் அனுப்பி வைத்த ஊழியர்

மகிழ்ச்சியாக வாழட்டும் என்று கூறி மனைவியை வாழ்த்தி காதலனுடன் ஊழியர் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வனிதா(வயது 29). இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவரும், தனியார் நிறுவன ஊழியருமான ஜெகத்குரு(32) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவர், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வனிதா, தனது கணவரை விட்டு பிரிந்து 2 மகன்களுடன் பழஞ்சநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்தார்.
அப்போது வனிதாவிற்கும், டி.நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கொத்தனாரான பிரபாகரன்(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்த நிலையில் ஜெகத்குரு, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பழஞ்சநல்லூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். ஆனால் அங்கு வனிதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகமடைந்த ஜெகத்குரு, காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வனிதா, பிரபாகரனுடன் வசித்து வருவது தெரியவந்தது.
இதையடுத்த வனிதா, ஜெகத்குருவுடன் போலீசாரும், அவர்களது குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வனிதா, தனது காதலன் பிரபாகரனுடன்தான் வாழ்வேன் என்று திட்டவட்டமாக கூறினார். அதற்கு ஜெகத்குரு, தனது மனைவிக்கு யாருடன் வாழ பிடிக்கிறதோ அவருடனே மகிழ்ச்சியாக வாழட்டும் என்று வாழ்த்தி விட்டு அவரை பிரபாகரனுடன் அனுப்பி வைத்தார். பின்னர் தனது 2 மகன்களை அழைத்துக்கொண்டு ஜெகத்குரு கண்ணீர் மல்க சொந்த ஊருக்கு புறப்பட்டார்.






